வேலைக்காரியின்
மனசு
காயல்பட்டிஎன்ற கிராமத்தில் பவானி என்ற ஒரு பெண் இருந்தாள். அவள் சிறுவயதிலே தாய் தந்தையை இழந்தவள். பாட்டி அரவணைப்பில் இருந்து வளர்ந்து வந்தாள். அவள் சிறுவயதில் இருந்தே வீட்டு வேலை செய்து தன் பாட்டியை கவனித்து வந்தாள். குடும்பத்தின் வறுமை காரணமாக அவளால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அவள்
வளர்ந்து வாலிப பருவத்தை அடைந்தாள். சிறுவயதில் இருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்ததால், திருமணமாவது நன்றாக அமைய வேண்டும் என்று எதிர்பார்த்தாள் பவானி. ஆனால் அதிலும் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால், அவளுக்கு அமைந்த வரமோ, ஒரு குடிகார கணவன். அவளுக்கு திருமணம் முடிந்த சிறிது காலத்தில் அவளது பாட்டி இயற்கை எய்தினார். கணவன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே குடித்து வந்தான். பவானி மறுபடியும் வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தாள். இவள் கொண்டு வரும் பணத்தை எல்லாம் இவளது கணவன் குடித்தே அழித்தான். இதற்கிடையில் பவானிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தன் குழந்தையை பார்த்தாவது, தன் கணவன் திருத்துவார் என்று எதிர் பார்த்தாள். அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் பவானிக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கவே, அவள் தன் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து மிகவும் கவலைப்பட்டாள். நான்தான் படிக்க முடியவில்லை, எனது குழந்தைகளாவது நன்றாக படிக்க வேண்டும் என்று சிந்தித்து கொண்டிருக்கையில், பவானியின் தோழி, வீட்டுக்கு வந்தாள். அவளது தோழி அவளிடம், ஏய் என்னடி இப்படி சோகமாக உட்காந்து இருக்க.என்ன ஆச்சு? என்று கேட்டாள். அதற்கு பவானி, நான்தான் சிறுவயது, இருந்தே
கஷ்டபட்டு வளர்ந்தேன். என் திருமண வாழ்க்கையாவது நன்றாக இருக்கும் என்று நினைத்தேன், அதுவும் எனக்கு தோல்வியாக முடிந்தது. என் கணவனுக்கு குடும்பத்தை குறித்து கவலையே இல்லை. இரண்டு பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்க போகிறேன் என்று கவலையுடன் கூறினாள்.இதை கேட்ட அவளது தோழி, ஒரு ஐடியா கொடுத்தாள்.
பவானி, எனக்கு தெரிந்த ஒரு தரகர் இருக்கிறார். அவர் வெளிநாட்டிற்கு பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்புகிறார். உனக்கு இஷ்டம் இருந்தா சொல்லு அவரது ஆபீஸ் முகவரியை தருகிறேன்.. நீ போய் நேரில் சந்தித்து பேசு என்றாள். ஆனாலும், என்று இழுத்தாள், ,,,,
ஏண்டி நிறுத்திட்ட, சொல்ல வந்ததை சொல்லுடி என்று கூறினாள் பவானி. இருபது வருடம் நீ அங்கு வேலை செய்ய வேண்டும். உன் குழந்தைகளை பிரிந்து செல்ல வேண்டியது இருக்கும் என்று கூறினாள்.
இந்த வார்த்தைகளை கேட்ட பவானி மிகவும் கலங்கினாள். ஏனென்றால்,ஒரு குழந்தைக்கு வயது ஐந்து.. இன்னொரு பெண் பிள்ளை வயது இரண்டு.
நீ யோசித்து
சொல்லு என்று கூறி விட்டு அவ்விடம் விட்டு சென்றாள் பவானியின் தோழி.
இரண்டு நாட்கள் யோசித்த பிறகு, தன் முடிவை, கணவனிடம் கூறினாள் பவானி. மிகவும் கனத்த இதயத்துடன், நான் வெளிநாட்டில் செல்கிறேன், அங்கும் வீட்டு வேலைதான் செய்ய போகிறேன் என்று கூறினாள். அவள், தன் கணவன் போக வேண்டாம்னு சொல்லுவார் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவனோ, நீ போய்ட்டு வா, நான் பிள்ளைகளை கவனித்து கொள்கிறேன். பணம் மட்டும் தவறாமல் அனுப்பி விடு என்று கூறினான்.
இந்த வார்த்தைகளை கேட்டதும் பவானி கலங்கினாள்.
பவானி தன் கணவனிடம்,
நான் போறதை குறித்து உங்களுக்கு கவலை இல்லையா? என்று கேட்டாள். அதற்கு அவன், எனக்கு கவலை எல்லாம் ஒண்ணும்இல்லை . பணம் மட்டும் தவறாம அனுப்புவேன் என்று சத்தியம் பண்ணி கொடு. என்று சத்தியம் வாங்கினான்.
ஒரு பெண்ணுக்கு கணவனின் அன்பு இருந்தாலே, அந்த பெண் எதையும் சாதிக்க முடியும். ஆனால் பவானிக்கு அந்த அன்பு கூட கிடைக்கவில்லை
கனத்த இதயத்துடன், மறுநாள் காலையில் எழுந்து தரகரை சந்தித்தாள்... மிகவும் பாரத்துடன் இரண்டு பெண் பிள்ளைகளை முத்தம் செய்துவிட்டு, வெளிநாடு கிளம்பினாள் பவானி.
தரகர் கூறிய வீட்டிற்கு வேலைக்கு வந்தாள் பவானி. அங்கு ஒரு நடுத்தர வயது கொண்ட பெண்மணி இருந்தாள். அந்த பெண்மணி, பவானியின் பாஸ்போர்ட் ஐ முதலிலே பிடுங்கி வைத்து கொண்டாள்.
அங்கு மிகவும் கஷ்டப்பட்டாள் பவானி. ஒரு வேலை உணவுதான் கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் அந்த நடுத்தர வயது பெண்மணி அடிக்கவும், உதைக்கவும் செய்தாள். நாட்களை கண்ணீரோடு கழித்து வந்தாள் பவானி. தன் பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் பொறுத்து கொண்டாள்..
பவானியின் பிள்ளைகள், தன் அம்மா வேண்டும் என்று அழத்தொடங்கினர். பவானியின் கணவன், உன் அம்மா இனிமே வர மாட்டாள், அவள் வேற ஒருத்தன் கூட போய் விட்டாள் என்று கூறி வளர்த்தான். பிள்ளைகளும் அம்மா மீது வெறுப்பாக வளர்ந்தது.
பவானி மிகவும் மெலிந்து காணப்பட்டாள்.
20 வருடங்களுக்கு பிறகு, பவானி இந்தியா , வருவதாக தகவல் அனுப்பினாள். விமானத்தில் ஏறிய பிறகு, அவளது மனம் மிகவும் சந்தோசமாக களிகூர்ந்து இருந்தது. என்
பிள்ளைகளை
நான்
20 வருடத்திற்கு பிறகு பார்க்கப்போகிறேன், என் பிள்ளைகள் வளர்ந்து இருப்பார்கள்,
ஏர்போர்ட்டில் நம்மை வரவேற்க கணவனும், என் பிள்ளைகளும் வருவார்கள், என் பிள்ளைகள் என்னை பார்த்ததும் அம்மா என்று கட்டி பிடித்து முத்தம் கொடுப்பார்கள்.நன்றாக படித்து பெரிய ஆளாக மாறி இருப்பார்கள் என்று சிந்தித்து கொண்டிருந்தாள்.
ஏர்போர்ட்டில் தன் கணவனும், பிள்ளைகளும் காத்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கும் பொழுது அவள் மனம் குதூகலித்தது. இந்த விமானம் எப்பொழுது இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தாள். தான் பட்ட கஷ்டம் எல்லாம், இன்றோடு முடிவடைய போகிறது என்று சிந்தித்தாள். விமானமும் மதுரை வந்தது. வேகமாக வெளியே வந்து தன் கணவனையும் , பிள்ளைகளையும் தேடினாள். ஆனால், யாருமே வரவே இல்லை. அவள் இருதயம் நொறுங்கியது. இருந்தாலும், தன் மனதை தேற்றி கொண்டு , அவர்களுக்கு வேற எதாவது வேலை இருக்கும், அதான் வர முடியவில்லை, நான் என் வீட்டிற்கு சென்று அவர்களை பார்க்கிறேன் என்று சிந்தித்து கொண்டே வீட்டை நோக்கி போனாள்..
வீட்டுக்கு போனதும், பிள்ளைகளும்,கணவனும் டிவி பார்த்து கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். வீட்டுக்குள்ளே போனதும், அவளது முதல் மகள், அவளை பிச்சைக்காரி என்று நினைத்து, ஏய், பிச்சைக்காரி, உனக்கு அறிவு இல்லையா? இப்படிதான் திறந்த வீட்டுக்குள் நாய் நுழைந்த மாதிரி வருவியா? என்று கத்தினாள்.
பவானி பேச அவள் சிறிதும் இடம் கொடுக்கவில்லை. வெளியே துரத்தினாள்.
பவானி, மகளே !
உன் அம்மா எப்படி இருக்கிறார்?.
என்று பொறுமையாக கேட்டாள்
அம்மா என்ற வார்த்தையை கேட்டதும் மிகவும் கோபம் அடைந்தாள் பவானியின் மூத்த மகள். எனக்கு அம்மாவே கிடையாது. அவள எனக்கு பிடிக்காது. அவள் வேற ஒருத்தன் கூட ஓடிபோய்ட்டா. அவளை பத்தி பேசாத என்ற வார்த்தைகளை கேட்டதும்
மிகவும் மனம் உடைந்து போனாள்.
பவானி மிகவும் மெலிந்து காணப்பட்டதால் அவள் கணவனுக்கு கூட அடையாளம் தெரியவில்லை.
பவானி மனதை திடப்படுத்திக்கொண்டு, உன் அம்மா மோசம் என்று யார் கூறியது? என்று கேட்டாள்.
அதற்கு அவளது மகள், எனது தந்தை கூறினார். நங்கள் சிறுவயதில் இருக்கும் போதே என் அம்மா வேற ஒருத்தனோட ஓடி போய் விட்டாள். எனது தந்தை எங்களை மிகவும் கஷ்ட பட்டு வளர்த்தார். எங்கள் நிலைமையை அறிந்த சிலர் வெளிநாட்டில் இருந்து எங்களுக்கு பணம் அனுப்புவதாகவும், அந்த பணத்தை வைத்து தான் நாங்கள் இன்று படித்து நல்ல நிலைமையில் இருப்பதாகவும், என் அம்மாவை நினைத்துதான் என் அப்பா குடிகாரராக மாறிப்போனார் என்றும்
கூறினாள். இந்த வார்த்தைகளை கேட்டதும், பவானி மிகவும் அழுதாள்.
எப்படி தன் பிள்ளைகளுக்கு தன்னை தெரியப்படுத்துவது என்று கலங்கி திகைத்து கொண்டிருக்கையில் பவானியின் தோழி அங்கு வந்தாள்
யார் கைவிட்டாலும், ஆண்டவர் நம்மை கைவிடுவதில்லை என்ற சொல்லுக்குகேற்ப பவானியின் தோழி அங்கு வந்தாள்.
அவளுக்கும் பவானியை அடையாளம் தெரியவில்லை. அவள் யார் என்று விசாரித்தாள். அப்பொழுது பவானியிடம் கூறிய வார்த்தைகளை மூத்த மகள், பவானியின் தோழியிடமும் கூறினாள். இதை கேட்டதும், பவானியின் தோழி கோவப்பட்டாள்.
வாயை மூடுடி, உன் அம்மா எவ்வளவு நல்லவள் தெரியுமா?. அவள் சிறுவயதிலே அவளது அம்மா, அப்பா இல்லாமல் பாட்டியிடம் வளர்ந்தாள். சிறுவயதிலே அவளுக்கு தாய், தகப்பன் அன்பு கிடைக்கவில்லை. சரி, கல்யாணமாவது நமக்கு நன்றாக கிடைக்கும் என்று எதிர்பார்த்தாள். உன் அப்பா மிகபெரிய குடிகாரன். அவன் வேலைக்கே செல்லவில்லை. இதற்கிடையில் இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றாள்.. தன்னை போல தன் பிள்ளைகள் கஷ்டப்பட கூடாது என்று அவள் மனதை கல்லாக்கி கொண்டு, உங்களுக்காக வெளிநாடு சென்று இருக்கிறாள். நீங்கள் நினைக்குற மாதிரி இந்த பணம் யாரோ அனுப்பல, உன் அம்மா கஷ்டப்பட்டு அனுப்புறது, நீ போட்டு இருக்குற டிரஸ், சாப்பிடுற சாப்பாடு, இருக்குற வீடு எல்லாம் அவள் கொடுத்தது. உன் அப்பா இதுவரைக்கும் வேலைக்கே போகல. அவன் குடிக்கிறதுக்கு ஒரு காரணம் உங்ககிட்ட சொல்லணும், அதான் என் பொண்டாட்டி ஓடி போய்ட்டா னு காரணம் சொல்லி குடிக்கிறான் . என்றாள்.
அப்பாவை, பிள்ளைகள் மதிக்க
வேண்டும், உங்கள் தகப்பனை குறித்து ஏதும் சொல்ல
வேண்டாம், என்று என் தோழி சத்தியம் வாங்கி கொண்டாள். அதான் இவ்வளவு நாட்கள் நான் கூறவில்லை.
ஆனால் எல்லாம் தெரிந்த உங்கள் தகப்பன், அம்மாவை பற்றி எவ்வளவு கேவலமாக சொல்லி இருக்கிறான்?
இதை கேட்டதும், பவானியின் பிள்ளைகள் மனமுடைந்து அழுதனர். ஐயோ என் அம்மாவை எவ்வளவு கேவலமாக நினைத்து விட்டோம், எங்க வீட்டு தேவதை நடத்தைல சந்தேகப்பட்டுட்டோமே என்று அழுதனர். இன்றைக்கு கூட என் அம்மா வருவதாக சொன்னார்கள். நாங்கள் தான் போகவில்லை. முதலில் வாங்க நாம அம்மாவை போய் பார்க்கலாம், அம்மாவிடம் மன்னிப்பு
கேட்க வேண்டும் என்று கூறினாள். அப்பாவையும் திட்டினர். தகப்பன் கூனி குறுகி நின்றான்.
அப்பொழுது பவானியின் தோழி, பவானியை நோக்கி, நீங்க யாரம்மா என்று கேட்டாள்? அவள் தன் தோழியை நோக்கி, என்னைய இன்னுமா உனக்கு அடையாளம் தெரியவில்லை? என்று கேட்டாள். அந்த குரல் பவானி என்று கண்டு பிடித்தாள் அவளது தோழி.பவானி எப்படி இருக்கிறாய் ? என்று கேட்டு விட்டு, பிள்ளைகளை பார்த்து, இவள்தான் உங்க தாய் என்று அறிமுகப்படுத்தினாள். அம்மாவை
கண்டதும், பிள்ளைகள் கட்டிப்பிடித்து முத்தம்
கொடுத்தனர். பவானியின் கணவனும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். அதன் பிறகு பவானி
தன் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தாள். பவானி தான் பட்டகஷ்டம்
நீங்கி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.
0 Comments